“அலைபாயுதே கண்ணா” பாடல் இலட்சக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பாடல். அந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும், யார் பாடினாலும் உள்ளம் சிலிர்க்கிறது. இத்தகைய காலத்தால் அழியாத பாடல்கள் பாரதியின் “சின்னஞ்சிறு கிளியே”, மைக்கேல் ஏஞ்சலோவின் மந்திரப்புன்னகை மங்கை “மோனாலிசா” மற்றும் தாஜ்மஹால் போன்று நம் மனதில் ஆழமாகப் பதிந்தவை. எவ்வளவு திறமையானயான கலைஞனாலும் அதன் வடிவத்தை மட்டுமே பிரதியெடுக்க முடியுமே ஒழிய அதனுடைய ஜீவனை இன்னொரு பிரதியில் சிருஷ்டிக்கமுடியாது. இந்தப் பாடல் மூலப்பாடலின் தாக்கத்தை மட்டுமே இன்னொரு வடிவில் பதிவு செய்கிறதேயொழிய அதற்கு மாற்றாகக் கருதப்படவேண்டாம் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். “Fools rush in where angels dare to tread” என்று ஆங்கிலக்கவி டிரைடன் கூறுவார். அதைப்போன்று இது சிறுபிள்ளைத்தனாமானதாக இருந்தாலும் என் உள்ளத்தில் எழுந்த வரிகளைப் பதிவுசெய்த திருப்திக்காக மட்டுமே இங்கு இதை வெளிப்படுத்தியிருக்கிறேன். இந்தப் பாடல் இசைக்கப்படும்போதுதான் அதன் தன்மை வெளிப்படும். இந்தப் பாடலை இசை ஞானம் உள்ளவர்கள் முயற்சித்து அதைப் பதிவுசெய்து எனக்கு அனுப்பிவைத்தால் அதனை நன்றியுடன் இந்தத் தளத்தில் இணைத்து வெளியிட இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பல்லவி:
அலை பாயுதே கண்ணா..
என் மனம் அலை பாயுதே
எந்த நேரமும் உன் முகம் என் மனதில் வந்து அலைபாயுதே
அனுபல்லவி:
நினைவகலாது நிலைகொள்ளாது
தவித்திடும் மனதினில் நிம்மதி ஏது?
சரணம்:
தெளிந்த நிலவும் உச்சி வெயில் போலக் காயுதே
பனியில் நனைந்தும் உடல் ஆறாக வியர்க்குதே
எதனை நினைந்தும் மனம் ஒன்றாமல் மருகுதே
துணையைப் பிரிந்த ஒரு களிறாக மிரளுதே
நினைத்து நினைத்து, மறக்க மறத்து
உறக்கமிழந்து தவித்திடுதே
பறக்க மறந்த பறவைபோல
உணர்வு மரத்துப் போனதுவே
அலைகடல் மீதினில் அலைந்த்திடும் துரும்பென
இங்கும் அங்கும் அலைபாய்ந்திடுதே
அனல்படு மெழுகென அனுதினம் எனதுள்ளம்
உன்னை நினைந்து மனம் உருகிடுதே – அலை பாயுதே கண்ணா
பின்னூட்டமொன்றை இடுக