தரை இறங்க முடியாமல் தவிக்கிறது ஒரு விமானம்.
இன்னொரு சுனாமியை எதிர்பார்த்து
அமைதியாகத் தவம் இருக்கிறது கடல்.
இலக்கின்றி எய்யப்பட்ட ஒரு அம்பு
எய்தவனை நோக்கியே பாய்ந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கான்கிரீட் காட்டிலா தவம் இருக்க நினைக்கிறாய்?
பாலைவனத்தில் சூரியக் குளியலா?
தூங்காத இரவுகள் விடிய மறுக்கின்றன.
சேவல் கூவலும், காகம் கரைதலும் காணாமல் போய்விட்டன.
ஒலிபெருக்கி அலறல்தான் இங்கு அதிகாலையை வரவேற்கிறது.
எளிமையும், ஏகாந்தமுமே இறைவனின் சின்னங்கள்.
எடுத்துச் சொன்னால் புரியுமா ஒரு நிமிடப் பக்தர்களுக்கு?
கற்பனைக்கெட்டாத, சொற்பதம் கடந்த
துரிய மெய்ஞான, கற்பகக் கடவுள்
உள்ளத்திலேயே ஒளிந்து கொண்டிருக்க
காடு, மலையெல்லாம் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கோடி, கோடியாய் நிரம்புகிறது உண்டியல்.
ஆயிரம் கோரிக்கைகளுடன்
கொடுத்ததைவிடக் குறைந்தது நான்கு மடங்கு
எதிர்பார்த்தே கொட்டுகிறான் கெட்டிக்கார பக்தன்.
பாவம், அந்த வெங்கடாஜலபதி என்ன செய்வார்?
ஒரு லிட்டர் குடிதண்ணீர் பதினைந்து ரூபாய்.
நாத்தம் பிடித்த கழிவறையில்
ஒன்றுக்குப் போவதற்கு இரண்டு ரூபாய்.
ஒரு கிலோ ரேஷன் அரிசியும், ஒரு கிலோ மணலும் ஒரே விலையில்!
கடவுளே! என்ன கணக்கு இது?
வீட்டுக்கணக்கைத் திருத்த ஒரு வாத்தியார் இருக்கிறார்.
நாட்டுக்கணக்கைத் திருத்த ஒரு நல்லவன் வருவானா?
வ.உ.சி., பசும்பொன், காமராஜர், அம்பேத்கார் –
தேசத் தலைவர்களெல்லாம் சாதித் தலைவர்களாக மாறி
கூட்டணியில் பங்குகேட்கப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கம்பிவலைக்குள் ஆயுள் கைதிகளாய் சிறையிருக்கும் சிலைகள்
வெட்கத்தில் நாணி நெளிந்து கொண்டிருக்கின்றன.
மல்லிகைப் பந்தல்கள் நிறைந்திருந்த இந்தத் தோட்டத்தில்
சிகப்பு ரோஜாக்களைப் பதியம் வைத்தது யார்?
பாரததேவிக்குத் தினமும் இரத்த அபிஷேகம்.
துடித்துப்போன பாரதப் பிதாமகர்
நாட்டாமை அமெரிக்காவிற்கு மனுப்போட்டிருக்கிறார்
பாகிஸ்தான் மயிலை இறகு போடச் சொல்லி.
பதில் வரும் வரை பொறுமையாக இருங்கள்.
அடுத்த தீபாவளிக்கு இன்னும் நாள் இருக்கிறது அல்லவா?
2020ல் வல்லரசாகிவிடும் இந்தியா!
பாலும், தேனும் (தேர்தலுக்கு முன்னால்) ஆறாக ஓடும்.
ஒரு ஓட்டுக்குப் பத்தாயிரம் கிடைக்கலாம்.
பொங்கலுக்கு இலவசமாய் ஒரு கடுக்கன் கொடுப்பார்கள்.
காதில் மாட்டிக்கொண்டு எல்லோரும் ஊர்வலம் போகலாம்.
பாரத் மாதா கீ ஜே!
பின்னூட்டமொன்றை இடுக