(இந்தப் பாடல் மானஸ சஞ்சரரே பாடலின் மெட்டில் அமைகிறது.)
பல்லவி:
ஏன் இந்தக் கோபம் ஐயா?
இன்னும் ஏன் இந்தக் கோபம் ஐயா?
கொஞ்சம் ஏறிட்டுப் பாரும் ஐயா..
சரணம்:
1.மாயமான் ஒன்றைத் தேடிப்பிடித்து
எந்தன் கைகளில் தரச் சொன்னேனா? – அன்றி
செஞ்சடை மீது அமர்ந்து அல்லும்பகலும் உன்னைத்
தொந்தரவு நான் செய்தேனா?
2. பொன்பொருள் வேண்டுமென்று பேராசை மிகக்கொண்டு
தினம் ஒரு வரம் கேட்டேனா?
நீ மோகித்து வரும்பொழுது முகம்காட்ட மறுத்துவிட்டுத்
தாபத்தில் தவிக்கவிட்டேனா?
3.வேடிக்கை பார்ப்பதற்கு ஒரு விளையாட்டுப் பொம்மையாக
நான்தானா அகப்பட்டேன்?
என் வேதனை அறியாது நீ கொடுக்கும் சோதனைகள்
தாளவில்லை ஐயா!
4. தினம் ஒரு மலர் நாடும் வண்டாக நீ இருந்தும்
உன்னிடம் நான் மயங்கினேன்.
ஒரு ஆண்டாளைப் போல உன்னை அனுதினமும் துதிக்கும் என்னைத்
திண்டாட விடுவதும் ஏனோ?
5.பூஜிப்பதற்கு உனக்கு என்போலப் பக்தைகள்
எத்தனையோ ஆயிரம் உண்டு – ஆனால்
நேசிப்பதற்கு எனக்கு உன்னைவிட்டால் வேறு
புகலிடம் இல்லை ஐயா!
6.நீலவான்வெளி உலவிடும் நிலவினைப்போல்
தனிமையில் நான் தவிக்கிறேன்.
இன்னும் தாமதம் செய்யாது வேதனை தீர்த்து என்னை
ஆதரித்தாளும் ஐயா!
பின்னூட்டமொன்றை இடுக