(இந்தப் பாடல் ஸாரே ஜெகன் ஸே அச்சா என்ற பாடலின் மெட்டில் அமைகிறது)
பல்லவி:
பாரில் சிறந்த நாடு
நம் பாரத நாடென்று பாடு
சரணம்:
1.அறிவோம் உன் திருப்புகழை
பெறுவோம் எம் தவப்பயனை
நலிந்தோர் நலம் பெற விழைவோம்
நம் நாட்டின் உயர்வுக்கு என்றென்றும் உழைப்போம்.
2.தவறாத பருவ மழையால்
என்றும் வற்றாத ஜீவநதிகள்
பசுமை நிறைந்த வயல்கள்
இவை இறைவன் நமக்குக் கொடுத்த வரங்கள்.
3.வேதம் பிறந்த நாடு
உயர் ஞானம் செறிந்த நாடு
புத்தர், காந்தி, நேரு
போன்ற உத்தமர் பிறந்த உன்னத நாடு.
4.உழவையும் தொழிலையும் மதிப்போம்
அலைகடலென ஓய்வின்றி உழைப்போம்
புதிய கலைகளைப் பயில்வோம்
எந்தத் துறையிலும் உலகினில் முதலிடம் பிடிப்போம்.
5.ஆற்றல் கொடுப்பது அறிவு
அந்த அறிவைத் தருவது கல்வி
கல்வியே சிறந்த செல்வம்
உயர் கல்வியைப் பெற்றிடக் கருத்துடன் முனைவோம்.
6.கலைகளில் சிறந்த நாடு
நுண்கலைகளில் நமக்கில்லை ஈடு
பண்ணும் பரதமும் பேசும்
பாரத மண்ணின் வாசனை உலகெங்கும் வீசும்.
7.உடலினை உறுதி செய்திடுவோம்
தொடர் பயிற்சிகளை நாம் எடுப்போம்
அயராத கடும் உழைப்பால்
நாம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் குவிப்போம்.
8.நிழல்தரும் மரங்களை நடுவோம்
மழைவளம் பெருக்கிட முனைவோம்
உயிர்தரும் நீரும் காற்றும்
நமக்கு மாசின்றிக் கிடைக்க உறுதி செய்திடுவோம்.
9. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நாம் பிரிந்து நின்றால் வரும் தாழ்வு
குன்றென நிமிர்ந்து நிற்போம்
நாம் ஒன்றாகத் திரண்டு வரும்பகை வெல்வோம்.
பின்னூட்டமொன்றை இடுக