1.தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா!
ஒன்றுபட்டு நின்று நீ
இந்த உலகை வெல்லடா!
2.அஞ்சி, அஞ்சி வாழும் வாழ்க்கை
இன்னும் உனக்கு ஏனடா?
அச்சம் என்ற சொல்லையே
உன் அகராதியில் நீக்கடா!
3.எட்டுத் திக்கும் சென்று பொருளை
ஈட்டி வந்து கொட்டடா!
கெட்டிக்காரத் தமிழன் என்று
உலகம் போற்ற வாழடா!
4.அறிஞர் அண்ணா காத்து வளர்த்த
அருந்தமிழைப் போற்றடா!
அப்துல்கலாம் போல நீயும்
அறிவைப் பெருக்கி உயரடா!
5.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
மூன்றும் உனது மூச்சடா!
பணிவும், துணிவும் உனது
ஆடை அணிகள் என்று எண்ணடா!
6.நாடும், வீடும் உனது இரண்டு
கண்கள் என்று கொள்ளடா!
இரண்டில் ஒன்று பழுதுபட்டால்
இன்பம் இங்கு ஏதடா?
7.ஜாதிப்பெயரைச் சொல்லி உன்னைப்
பிரித்து ஆளும் சூழ்ச்சியை
முளையிலேயே கிள்ளி எறிந்து
அழிவிலிருந்து மீளடா!
8.ஏழு ஸ்வரங்கள் இணையும்போதும்
பாடல் ஒன்று தானடா!
ஏழு மதங்கள் இருக்கும்போதும்
இறைவன் ஒருவன் தானடா!
9.வேற்று மததைத் தூற்றிப் பிழைக்கும்
வீணர் உறவை விலக்கடா!
மாற்றுக்கருத்தைக் கூறுவோரை
மதித்து வாழப் பழகடா!
10.ஓட்டுக்காகக் காசு வாங்கும்
பழக்கம் தன்னை ஒழியடா!
காசு கொடுக்கக் காத்து நிற்கும்
கயவர்களைச் சாத்தடா!
11.இலவசமாய்க் கிடைக்கும் பொருளுக்கு
ஏங்குவது ஏனடா!
இலவசமாய்க் கிடைப்பதெல்லாம்
இரண்டு மடங்கு விலையடா!
12.இயற்கை வளங்கள் யாவும் நமக்கு
இறைவன் கொடுத்த வரங்களே1
கவனமாகப் பேணிக் காத்தால்
வளரும் பிள்ளை பிழைக்குமே
13.இறைவன் கொடுத்த அறிவுகொண்டு
நிலவை நீயும் எட்டலாம்
நேர்மையாக வாழத் தெரிந்தால்
உலகை நீயும் ஆளலாம்!
பின்னூட்டமொன்றை இடுக