1.சக்தி சக்தி சக்தி சக்தி
சக்தி என்று சொல்லடா,
சுற்றி நிற்கும் பகைகள் யாவும்
தூர்ந்து போகக் காணடா!
2.சக்தி உந்தன் மனதில் நிற்கச்
சோர்ந்து போதல் ஏனடா?
சக்தி பெயரைச் சொல்லிச் சொல்லி
அச்சம்தன்னைப் போக்கடா!
3.காடு, மேடு, கழனி எங்கும்
சக்தி உந்தன் ஆட்சியே
வீடு, மனைவி, மக்கள் யாவும்
சக்தி தந்த மாட்சியே!
4.கடலும், நிலவும், வானும், நிலமும்
சக்தியின் அவதாரமே!
காற்றும், மழையும், புயலும், வெயிலும்
சக்தியின் உருமாற்றமே!
5.சக்தியின்றி எதுவும் இங்கு
அசைவதில்லை தோழனே!
வித்துமின்றி மரமெதுவும்
வளர்வதுண்டோ நண்பனே!
6.கற்ற வித்தை காடுவரை
கை கொடுத்து உதவுமே!
சக்தியிடம் சரணடைந்தால்
வீடுபேறு கூடுமே!
7.நாடும் பொருட்கள் யாவும் அன்னை
சக்தியிடம் கிடைக்குமே!
தேடும் ஞானம் எல்லாம் அவள்
நாமமதில் அடக்கமே!
8.நின்றும், இருந்தும், நடந்தும், கிடந்தும்
நினைப்பது உந்தன் பாதமே!
என்றும் எந்தன் சிந்தையிலே
நிற்பது உந்தன் நாமமே!
9.துன்பம் யாவும் தொலைந்து மனதில்
இன்பம் என்றும் பொங்குமே!
குறைவிலாத வாழ்வில் மனதில்
அமைதி என்றும் நிலைக்குமே!
10.சக்தி, சக்தி, சக்தி, சக்தி
சக்தி என்று சொல்லடா!
சக்தி பெயரைச் சொல்லிச் சொல்லி
முக்தி நிலையை அடையடா!
பின்னூட்டமொன்றை இடுக