“என்ன தவம் செய்தனை” என்ற காபி ராகப் பாடலின் மெட்டு.
பல்லவி:
என்ன தவம் செய்தேனோ – தோழா
இந்திய மண்ணில் பிறந்திட நான்
சரணம்:
1.ஒரு நூறு கோடி உள்ளங்கள் வாழும்
பரந்து விரிந்த பாரத தேசம்
எங்கள் தந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவி
வாழ்ந்து வளர்ந்த சுந்தர தேசம்.
2.கங்கை நதியும், காவிரி ஆறும்
கம்பன் கவி போல் பெருக்கெடுத்து ஓடும்.
காற்றில் அசையும் நெற்கதிர்மணிகள்
பொற்கதிர் ஒளியில் நாட்டியம் ஆடும்.
3.அயராது உழைக்கும் உழவர்தம் உழைப்பால்
பசிப்பிணி போக்கிடும் பாரத நாடு
தொழிலாளர்களும், தொழில் முனைவோரும்
சேர்ந்திங்கு குவித்திடும் வளம் பல நூறு
4.மாமல்லபுரத்தின் உயிருள்ள சிலைகள்
சிற்பக் கலையின் சிறப்பினைப் பேசும்.
பாரத மண்ணின் பண்ணும், பரதமும்
என்றும் உலகை வியப்பில் ஆழ்த்தும்.
5.திறன்மிகு இளைஞர்கள் திரைகடலோடித்
தேடிய செல்வம் சிறப்பினைச் சேர்க்கும்.
ஸ்ரீஹரிகோட்டா செலுத்திய கலங்கள்
இந்திர லோகத்தை எட்டிப் பார்க்கும்.
6.பலவித மொழிகள், பல்வகை இனங்கள்
பலப்பல மதங்கள் தழைத்திடும் நாடு.
அவர் அனைவரும் ஒரு மரப்பறவைகளைப் போல்
கூடிக் குலாவி மகிழ்ந்திடும் வீடு.
7.கவின்மிகு வனங்கள், இறைஉறை மலைகள்,
இயற்கை வளங்கள் கொண்ட தேசம்.
பல்வகைப் பயிர்கள், நலந்தரும் கனிகள்
அனைத்தையும் ஈந்திடும் கற்பக விருட்சம்.
8.வறுமையிலும், உயர்வாழ்க்கையிலும் தம்
நெறிபிறழாமல் வாழ்ந்திடும் மாந்தர்
எத்தனை இடர்கள் எதிர்வந்தபோதும்
ஒற்றுமையால் வெற்றி பெற்று உயர்வர்.
9.எத்தனை பிறவி நான் எடுத்தாலும்
இந்தியனாகவே பிறந்திட வேண்டும்.
உத்தமர் காந்தி காட்டிய வழியில்
நித்தமும் நான் நடை பயின்றிட வேண்டும்.
பின்னூட்டமொன்றை இடுக